கோலாலம்பூர் , ஜன 4 – மின்னணு பயண அங்கீகாரம் (ETA)/இ-விசாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள தனிப்பட்ட விவரங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக, இந்தியாவுக்கான விமானங்களில் ஏறும் பயணிகள் சிக்கலை எதிர்கொள்ளும் சம்பவங்கள் குறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது .
ஆகையால் https://indianvisaonline.gov.in/evisa/ என்ற இணையதளத்தில் கிடைக்கும் ஆன்லைன் இ-விசா விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் போது, விண்ணப்பதாரர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை குறிப்பாக பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் எண் போன்றவற்றை கவனமாகச் சரிபார்க்குமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது.
இதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், விண்ணப்பதாரர்கள் உடனடியாக indian-evisa@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அதைத் தெரிவிக்க வேண்டும் என இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.