ஜொகூர் பாரு, டிசம்பர் 19 – ஜோகூர், ஸ்டாய், தாமான் யுனிவர்சிட்டியிலுள்ள, அடுக்குமாடி குடியிருப்பில், நள்ளிரவில் நடத்தப்பட்ட பூஜையின்போது ஒலிக்கப்பட்ட மணியின் ஓசையினால் தனது தூக்கம் களைந்ததாக எழுந்த கருத்து வேறுபாடே, இரு அண்டை வீட்டுக்காரர்களுக்கு இடையில் மூண்ட சண்டைக்கு காரணம் என கூறப்படுகிறது.
இம்மாதம், எட்டாம் தேதி, நள்ளிரவு மணி 12.30 வாக்கில், அச்சம்பவம் நிகழ்ந்ததாக, ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கனிஸ்னர் பல்வீர் சிங் மஹின்டர் சிங் தெரிவித்தார்.
எனினும், நேற்று மாலைதான் அச்சம்பவம் தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்பட்டதாக பல்வீர் சொன்னார்.
அந்த சண்டையால், சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.
இதனிடையே அச்சம்பவம், தொடர்பு பல்லூடக சட்டம் மற்றும் சிறு குற்றங்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்கள், போலீஸ் விசாரணைக்கு முன் வந்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக, சமூக ஊடகங்களில் வைரலான காணொளியில், ஆடவர் ஒருவர் அண்டை வீட்டின் முன் நின்று பெண் ஒருவரை ஆவேசமாக ஏசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நள்ளிரவு ஆகிவிட்ட நிலையில், அளவுக்கு அதிகமாக சத்தம் போடும் உங்களால் மற்றவர்கள் நிம்மதியாக உறங்க முடியவில்லை என அவர் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.