ஜோர்ஜ் டவுன், டிச 7 – பினாங்கு, ஜோர்ஜ்டவுன், ஜாலான் சுங்கை, பி.பி.ஆர் வீடமைப்பு பகுதியில் கைகலப்பில் ஈடுபட்ட ஐவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் கூர்மையான ஆயுதத்தையும் பறிமுதல் செய்தனர்.
நேற்று அதிகாலையில் நிகழ்ந்த அந்த மோதலில் ஒருவர் காயம் அடைந்ததாக தீமோர் லாவுட் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் வி.சரவணன் தெரிவித்தார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஐவர் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து பினாங்கு தீமோர் லாவுட் போலீஸ் தலைமையகத்தின் D9 போலீஸ் குழுவின் உறுப்பினர்கள் நிகழ்விடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அங்கு ஆடவர் ஒருவர் தலையில் இரத்தம் சொட்ட சொட்ட காயம் அடைந்த நிலையில் இருந்ததோடு துப்பாக்கி வைத்திருந்ததையும் போலீசார் கண்டனர். இதனை தொடர்ந்து அந்த நபர் விசாரணைக்கு கைது செய்யப்பட்டதாக சரவணன் கூறினார்.
அதே வேளையில் தகராறில் ஈடுபட்டதாக நம்பப்படும் நால்வர், ஒரு காரில் தப்பியோடியதை தொர்ந்து அக்காரை துரத்திச் சென்று வழிமறித்து அதில் இருந்த நால்வரையும் போலீசார் கைது செய்ததாக அவர் கூறினார். கைது செய்யப்பட்ட அனைவரும் 24 முதல் 34 வயதுக்கிடையிலான உள்நாட்டைச் சேர்ந்த ஆடவர்கள் என சரவணன் தெரிவித்தார்.