கோலாலம்பூர், ஜன 12 – போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரியவிருக்கிறார். அவர் முருகப் பெருமான் வீற்றிருக்கும் மேல் குகைக்குச் செல்வார் என நம்பப்படுகிறது. உலகளவில் பிரசித்திப்பெற்ற பத்துமலை தைப்பூச விழாவிற்கு வருடாந்தோரும் லட்சக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் கூடுவது சிறப்பம்சமாகும். அவ்வகையில் இம்மாதம் 25ஆம் தேதி நடைபெறவிருக்கும் தைப்பூச விழாவை முன்னிட்டு டான் ஶ்ரீ நடராஜா தலைமையிலான கோலாலம்பூர் ஶ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானம் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வருகிறது.
அந்தோனி லோக் நாளை அங்கு வருகை புரியும் போது அந்த ஏற்பாடுகள் பற்றிய நிலவரத்தையும் நிர்வாகத்திடம் கேட்டறிவார் என அறியப்படுகிறது. முதல் முறையாக பத்துமலை திருத்தலத்திற்கு வருகை புரியவிருக்கும் DAP-யின் தலைமைச் செயலாளருமான அந்தோனி லோக்கிற்கு டான்ஸ்ரீ நடராஜா தலைமையிலான ஆலய நிர்வாகம் அவருக்கு சிறப்பு செய்யவிருக்கிறது. தைப்பூசத்திற்கு பத்துமலை திருத்தலம் உட்பட நாடளாவிய அளவில் உள்ள ஆலயங்களுக்கும் பல்லின மற்றும் பல்சமய தலைவர்களும் வருகை புரிவது மலேசிய மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.