
கோலாலம்பூர், நவ 9- , சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் ஸாகிர் நாயக்கிற்கு எதிரான வழக்கில் 1.52 மில்லியன் ரிங்கிட் வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து ஏழு நாட்களில் அந்த தொகையை நன்கொடை வாயிலாக திரட்டும் முயற்சியில் பினாங்கின் முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமி வெற்றி பெற்றார். தமிழர் குரல் இயக்கத்தின் ஏற்பாட்டில் நவம்பர் 2ஆம் தேதி தொடங்கிய இந்த நிதி திரட்டம் நடவடிக்கைக்கு இன்று நவம்பர் 9ஆம் தேதி காலை மணி 11.30 அளவில் 1,523,187.83 ரிங்கிட் திரண்டதன் மூலம் இந்த நடவடிக்கை பெரிய அளவில் வெற்றி பெற்றது. வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் சேர்ந்த இந்திய சமூகத்தினர் தமக்கு வாரி வழங்கிய இந்த நன்கொடை இவ்வாண்டு தீபாவளிக்கு தமக்கு கிடைத்த மறக்க முடியாத பரிசு என்றும் ராமசாமி தெரிவித்தார். இந்த நிதி திரட்டும் இயக்கத்திற்கு நிதி அனுப்புவதை நிறுத்திக்கொள்ளும்படி அவர் தமது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்திய சமூகத்தின் உரிமைக்காக குரல் குடுப்பவர்களுக்கு சிரமம் ஏற்படும்போது உதவியும் ஆதரவும் வழங்குவதற்கு நாங்கள் துணையாக இருக்கிறோம் என்பதை நிருபிக்கும் வகையில் டாக்டர் ராமசாமியின் நன்கொடை திரட்டும் இயக்கத்திற்கு மக்கள் நன்கொடை வழங்கியுள்ளனர். அதுவும் அரசியல் கருத்து வேறுபாடு எல்லாம் மறந்துவிட்டு சமூகத்தின் ஒற்றுமையை மீண்டும் நிருபிக்கும் வகையில் இந்திய சமூகத்தினர் செயல்பட்டிருப்பது பாராட்டக்கூடிய ஒன்றாகும்.