கோலாலம்பூர், ஜன 14 – வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையின் 199 ஆவது கிலோமீட்டரில் பஸ் ஒன்றில் ஏற்பட்ட தீயைச் தொடர்ந்து அதன் பயணிகளில் ஒருவரான 19 வயதுடைய இந்திய பிரஜை யாஃபாரா தாஜ் ஃபக்ருதீன் ஹுசைனி மரணம் அடைந்த வேளையில் அறுவர் காயம் அடைந்தனர். அலோர்காஜா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் யாஃபாரா தாஜ் மரணம் அடைந்தார். இந்தியாவைச் சேர்ந்த 69 வயதுடைய பீர் முகமட் , 45 வயதுடைய அனிசா பேகம் ஃபக்ருதீன் ஹுசைனி ஆகியோர் கடுமையாக காயம் அடைந்தனர். இவர்களுடன் 68 வயதுடைய மொஹிதீன்மீரால் பீர்முகமட் மற்றும் 19 வயதுடைய தஸ்மியா தாஜ் உட்பட மொத்தம் அறுவர் காயம் அடைந்தனர். .
சிங்கப்பூரிலிருந்து 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் கோலாலம்பூர் திரும்பிக்கொண்டிருந்தபோது இன்று அதிகாலை மணி 3.50 மணியளவில் அந்த பஸ் தீப்பிடித்ததாக அயெர் கெரோ தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் நடவடிக்கை பிரிவின் அதிகாரி ஸஹ்ருல் அஸ்ஹா மொக்தார் தெரிவித்தார். 21 வயது இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் சாலையின் இடதுபுறம் கவிழ்ந்து. பஸ் மோதுவதற்குள் மோட்டார் சைக்கியோட்டி எழுந்ததால் அவர் உயிர் தப்பினார். எனினும் கீழே விழுந்த மோட்டார் சைக்கிள் பஸ் அடியில் சிக்கிக்கொண்டு இழுத்துச் சென்றதால் பஸ் தீப்பிடித்தது.
அந்த பஸ்ஸில் இருந்த ஓட்டுனர், துணை ஓட்டுனர் உட்பட 23 பயணிகள் காயம் அடையவில்லை. தகவல் அறிந்த சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு தீயணைப்பு படையினர் வருவதற்குள் அந்த பஸ் முழுமையாக தீயில் அழிந்துவிட்டது. காயம் அடைந்த பஸ் பயணிகளில் அறுவர் தீயணைப்புத் துறையின் அவசர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பஸ்ஸின் பின்னால் அமர்ந்திருந்த மூவர் தீயில் சிக்கிக்கொண்டதாக அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன்ட் அர்ஷாட் அபு கூறினார்.