
கோத்தா கினாபாலு, பிப்ரவரி-5 – ஹோட்டல்களில் தங்கியச் செலவு என 20,000 ரிங்கிட்டுக்கு போலி கணக்குக் காட்டிய சந்தேகத்தில், சபா மாநில அரசுத் துறையொன்றின் நிதி நிர்வாக உதவியாளர் கைதாகியுள்ளார்.
MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோத்தா கினாபாலு கிளை அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்க வந்த போது, 30 வயது அவ்வாடவர் கைதானார்.
சபா MACC இயக்குநர் டத்தோ எஸ்.கருணாநிதி அதனை உறுதிப்படுத்தினார்.
ஹோட்டல்களில் தங்கியச் செலவுக்கானக் கோரிக்கையாக நால்வர் பெயரில் 23 கட்டண இரசீதுகளை அவர் சமர்ப்பித்துள்ளார்.
ஆனால் உண்மையில் அவர்களில் ஒருவர் கூட சம்பந்தப்பட்ட ஹோட்டல்களில் தங்கியதே இல்லையென்பது, தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
அந்த போலி இரசீதுகளில் சபாவில் செயல்பட்டு வரும் ஹோட்டல்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த போலி இரசீதுகளை இணையச் செயலியின் மூலம் சந்தேக நபர் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் 2009 MACC சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுவதாக டத்தோ கருணாநிதி கூறினார்.
சந்தேக நபர் இன்று கோத்தா கினாபாலு செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.