கோலாலம்பூர், டிச 29 – போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 28 மலேசியர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்ற விசாரணைத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் கமருடின் மாட் டின் தெரிவித்தார். கடந்த ஆண்டு போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் வெளிநாடுகளில் 17 தனிப்பட்ட நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்ட வேளையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். கடந்த 2021 ஆம் ஆண்டு பல்வேறு வெளிநாடுகளின் நுழைவு மையங்களில் 32 மலேசியர்கள் கைது செய்யப்பட்ட தகவலையும் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் முகமட் கமருடின் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் போதைப் பொருளை கடத்திச் செல்லும் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் 5,000 ரிங்கிட் மற்றும் 10,000 ரிங்கிட் வழங்கப்படுகின்றன. சமூக வலைத்தளங்கள் மூலம் இதற்காக தனிப்பட்ட நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். போதைப் பொருள் கடத்தல் குற்றங்களில் சம்பந்தப்பட்டதன் காரணமாக வெளிநாடுகளில் கைது செய்யும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும் கூடுதல் பணம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தைக்கு மயங்கி மலேசியர்கள் தங்களது வாழ்க்கையை பாழாக்கிக் கொள்ளக்கூடாது என முகமட் கமருடின் கேட்டுக்கொண்டார்.