ஜொகூர் பாரு, டிச 6 – ஜொகூர் பாரு நகரில் இன்று சுமார் இரண்டரை மணி நேரம் பெய்த மழையைத் தொடர்ந்து 25 இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. இன்று நண்பகல் 2 மணியிலிருந்து பல இடங்களில் வெள்ளம் நீர் அதிகரித்து வருவதாக தகவல் வெளியானது முதல் ஸ்குவாட் கிலாட் (Skuad Kilat) எனப்படும் தொண்டூழியர் பணிக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிக்கு சென்றனர். மாலை மணி 3.40 க்குள் ஜொகூர் பாருவில் 25 இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. சில இடங்களில் அடுத்த சில மணி நேரத்தில் வெள்ளம் வடிந்தது. ஜாலான் அயர் மோலேக், ஜாலான் கோலாம் அயெர், ஜாலான் யாஹ்யா அவால் உட்பட இஸ்தானா புக்கிட் செரீன் முன்புற பகுதி உட்பட பல இடங்கள் திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன.
ஜொகூர் பாரு மாநாகர் மன்றத்தின் அமலாக்கப் பிரிவினர் ஜாலான் அயர் மோலேக் நெடுகிலும் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் சிக்கிக் கொண்ட கார்களை அப்புறப்படுத்தினர். கடலில் நீர்ப் பெருக்கு ஏற்பட்ட வேளையில் கடுமையாக மழை பெய்ததால் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.