ஈப்போ, டிச 15 – பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியத்தின் ஏற்பாட்டில் வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு இரண்டாவது ஆண்டாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி நிதி வழங்கப்படுகிறது. பேரா மாநிலத்தில் 134 தமிழ்ப்பள்ளியில் பயிலும் வறுமை நிலை மாணவர்களுக்கு இந்த நிதி வழங்கப்படுவதாக பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு ,அறவாரியத்தின் இயக்குனர்களின் ஒருவரான க. நாச்சிமுத்து தெரிவித்தார். இந்த நிதி வழங்கும் நிகழ்வு பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றத்தின் ஆதரவுடன் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.
கோலகங்சார் மாவட்டத்தில் நடைபெற்ற நிதி வழங்கும் நிகழ்வில் மாணவர்களின் சார்பில் கலத்துக்கொண்ட மாணவர்களின் பெற்றோர்கள் நிதியை பெற்றுச் சென்றனர். இந்த ஆண்டு 750 மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 200 ரிங்கிட் உதவி பெறுகின்றனர். பேரா மாநில அரசாங்கம் வழங்கிய இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்ட செம்பனை விளைச்சலில் கிடைக்கின்ற வருமானத்தின் வழி முனியாண்டி தலைமையிலான பேரா மாநில இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரியம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக நாச்சிமுத்து தெரிவித்தார். ஈப்போவில், குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற அந்த நிதி வழங்கும் நிகழ்வில் பேரா இந்தியர் கல்வி மேம்பாட்டு அறவாரிய இயக்குனர் எஸ். ஜெயகோபி கலத்துக்கொண்டு நிதியை வழங்கினார்.