கோலாலம்பூர், ஜனவரி 31 – அரச மலேசிய போலீஸ் படை, இவ்வாண்டு செப்டம்பர் தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி வரையில், ஏழாயிரத்து 648 உடல் காமிராக்களை கட்டங் கட்டமாக பெறுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உள்துறை அமைச்சு அதனை உறுதிப்படுத்தியுள்ளது.
போலீஸ் ரோந்து வாகனம், ரோந்து மோட்டார் சைக்கிள் பிரிவினர் உட்பட போக்குவரத்து போலீஸ் துறைக்கும் அந்த உடல் காமிராங்கள் விநியோகிக்கப்படுமென, புக்கிட் அமானின் குற்றச்செயல் தடுப்பு, சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் டத்தோ வான் ஹசான் வான் அஹ்மாட் தெரிவித்தார்.
இவ்வாண்டு அக்டோபர் தொடங்கி, நாடு முழுவதும் உள்ள 157 மாவட்ட போலீஸ் நிலையங்களிலும், 640 போலீஸ் தலைமையகங்களிலும் அந்த உடல் காமிராக்கள் பயன்பாட்டுக்கு வருமெனவும் வான் ஹசான் சொன்னார்.
அதனால், அந்த உடல் காமிராக்களை முறையாக இயக்கும் ஆற்றலை பெற, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படும்.
உடல் காமிராக்கள் பயன்பாடு, அரச மலேசிய போலீஸ் படையின் நற்தோற்றத்தை மேம்படுத்தும் என்பதோடு, குற்றம் புரியும் அதிகாரிகள் அல்லது பொதுமக்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றம்சாட்ட அதனை ஒரு ஆதாரமாகவும் பயன்படுத்த முடியும்.