சபா, டிச 1 – சபாவில் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில், விபத்து ஒன்று நிகழ்ந்திருப்பதைக் கண்டு நிலைமையை விசாரிக்கச் சென்ற இளைஞனுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. காரணம் இறந்திருந்தது அவரது அண்ணணாகும்.
விபத்தில் சம்பந்தப்பட்டது யாரோ என நினைத்து பார்த்த தம்பிக்கு இறந்தது அண்ணன் என தெரிய வந்ததும் தான் துயரத்தில் உடைந்தே போனதாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 2.12 மணியளவில், தன் அண்ணனைக் காண சென்றுக் கொண்டிருந்த லொரென்சோ எனும் அவ்விளைஞன், சாலையில் விபத்தைக் கண்டதும் இறங்கிச் சென்று பார்த்தபோதுதான் தனது 23 வயது அண்ணன் இறந்து விட்டது தெரியவந்துள்ளது.
இதனிடையே, முதல் கட்ட விசாரணையில், வளைவு ஒன்றில் சென்ற போது, தவறுதலாக மோட்டார் வண்டி எதிர்புர சாலையில் நுழைந்ததைத் தொடர்ந்து இவ்விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது என கூறியுள்ளார் கோத்தா கினாபாலு மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமட் ஸைடி அப்துல்லா தெரிவித்துள்ளார். எதிர்புர சாலையில் நுழைந்த மோட்டார் வண்டியை ட்ரெய்லர் லாரியில் மோதியதில், அது 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.