கோலாலம்பூர், ஜன 12 – சரவா, கூச்சிங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரேபிஸ் (Rabies) கிருமியைக் கொண்ட நாய் 24 மணி நேரத்தில் 11 பேரை கடித்திருக்கிறது. அவர்களில் பெரும்பாலோர் 11 மற்றும் 81 வயதுக்கிடையிலானவர்கள் என தென் கூச்சிங் மாநகர் மன்ற மேயர் வீ ஹாங் செங் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவங்கள் குறித்து தாம் கவலையும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியிருப்பதாக அவர் கூறினார். மற்றொரு சம்பவத்தில் ரேபிஸ் கிருமியை கொண்டுள்ள வளர்ப்பு நாய் ஒன்று தமது முதலாளியை கடித்துள்ள தனிப்பட்ட சம்பவமும் நிகழ்ந்திருப்பதையும் வீ தெரிவித்ததாக டாயாக் டெய்லி தினசரி தகவல் வெளியிட்டுள்ளது. நாய்க்கடிக்கு பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான சிகிச்சை மேற்கொண்டாலும் தங்களுக்கு ரேபிஸ் நோய் இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருப்பதால் அவர்கள் கடுமையான சூழ்நிலையை சந்திக்கும் அனுபவத்தை கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
ரேபிஸ் கிருமிக்குள்ளான நாயின் கடிக்கு உள்ளான 12 பேர் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என அவர் தெரிவித்தார். ரேபிஸ் நோயினால் இறந்தவர்களில் பெரும்பாலோர் தாங்கள் நாய்க்கடிக்கு உள்ளானதை தெரிவிக்காமல் இருந்தவர்கள். எனவே நாய்கள், பூனைகள் அல்லது வளர்ப்பு பிராணிகள் எது கடித்தாலும் உடனடியாக பொதுமக்கள் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என வீ கேட்டுக்கொண்டார். சரவாக்கில் நாய்க்கடி மூலம் பரவும் ரேபிஸ் நோயினால் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 73 பேர் பாதிக்கப்பட்டனர். அந்த நோயினால் இதுவரை 66 பேர் உயிரிழந்தனர்.