சுபாங் ஜெயா, மார்ச்-15, சிலாங்கூர் சுபாங் ஜெயாவில் போலீஸ் வீட்டையே உடைத்து கொள்ளையடித்த ஆயுதமேந்திய இரு ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.
புதன்கிழமை நண்பகல் 12 மணி வாக்கில் SS15/7 பகுதியில் உள்ள வீட்டில் அச்சம்பவம் நிகழ்ந்நது.
குழாய் திருகப் பயன்படுத்தப்படும் கருவியை (Pipe Wrench ) ஆயுதமாகக் கொண்டுச் சென்று அவர்கள் கொள்ளையடித்ததில், 35 வயது போலீஸ்காரருக்கு 15 ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.
கொள்ளை நடந்த போது வீட்டில் ஒரு பெண்மணி மட்டும் இருந்திருக்கிறார்.
இந்நிலையில், CCTV கேமரா உதவியுடன் 50 வயது மதிக்கத்தக்க இரு சந்தேக நபர்களும் அதே நாளில் ரவாங்கில் கைதாகினர்; கொள்ளையடிக்கப்பட்டப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
18 குற்றவியல் மற்றும் 7 போதைப்பொருள் குற்றப்பதிவுகளை அவர்கள் கொண்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
அக்கும்பலைச் சேர்ந்தவன் என நம்பப்படும் மற்றொரு ஆடவனையும் போலீஸ் தேடி வருகிறது.
கும்பலாகக் கொள்ளையிட்டது மற்றும் படுகாயம் ஏற்படுத்தவல்ல ஆயுதத்தை ஏந்திக் கொள்ளையிட்டது என இரு பிரிவுகளில் விசாரணை நடைபெறுகிறது.