அலோஸ்டார், நவ 6 – காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு ஒப்பந்த கால அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி தலைமை இயக்குனர் டத்தோ பிகாரூடின் கசாலி தெரிவித்தார்.
9,552 ஆசிரியர்களை DG 41 பதவிக்கு நிரந்தரமாக நியமிப்பதுடன் ஒப்பந்தகால ஆசிரியர்களை நியமிப்பதும் கல்வி அமைச்சின் முன்னுரிமை திட்டங்களில் ஒன்றாக இருப்பதாக அவர் கூறினார். சில காலி இடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படும் அதே வேளையில் ஒப்பந்தகால அடிப்படையில் ஆசிரியர்களை கல்வி அமைச்சு நியமிக்கும் என பிகாரூடின் தெரிவித்தார்.
வட்டார உருமாற்ற மாநாட்டை முன்னிட்டு மலேசிய கல்வி அமைச்சின் தலைமை இயக்குனருடன் நடைபெற்ற சந்திப்பு நிகழ்வில் கலந்துகொண்டபோது அவர் இதனை தெரிவித்தார். எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக பொது மற்றும் தனியார் உயர்க்கல்வி நிலையங்களுக்கிடையே கல்வி அமைச்சு தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் பிகாரூடின் கூறினார்.