மலாக்கா, டிச 30 – மலாக்கா, சுங்கை ஊடாங் அடுக்குமாடி குடியிருப்பில் இராணுவ வீரர் ஒருவர் மனைவியைத் தாக்கும் காணொளி ஒன்று வைரலாகியிருப்பதைத் தொடர்ந்து போலிஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.
32 விநாடிகள் கொண்ட அந்த காணொளியில் ராணுவ வீரர் ஒருவர் மனைவியைத் தாக்குவதும், வீட்டின் உள்ளே போ என்று பணிப்பதும், ஒரு சிறிய கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்போவதாக மிரட்டுவதும் போல காட்சிகள் இருக்கின்றன.
அதே சமயத்தில் அந்த மனைவியோ, என்னை அடிக்காதீர்கள், வலிக்கிறது என கெஞ்சுவதும், அண்டை வீட்டுக் காரர் ஒருவர் சண்டையை தட்டிக் கேட்கும் போது அந்த இராணுவ வீரர் புறக்கணிப்பதும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் 38 வயது பெண் ஒருவருடமிருந்து போலிஸ் புகார் ஒன்றை பெற்றிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து 25 வயது இராணுவ வீரரான அவரது கணவரை விசாரிக்க அழைத்திருப்பதாகவும் மலாக்கா போலிஸ் தலைவர் டத்தோ வீரா ஜைனோல் சமா கூறியுள்ளார்.