
பெட்டாலிங் ஜெயா, ஏப் 29 – காஜாங்கிலுள்ள பேராங்காடியில் பணம் செலுத்தும் முகப்பிடத்தில் 16 வயது இளம் பெண்ணின் உடல் பாகங்களை வீடியோவில் பதிவு செய்த ஆடவன் தடுத்துவைக்கப்பட்டுள்ளான். 48 வயதுடைய அந்த ஆடவன் நேற்று பின்னிரவு மணி 12.15 அளவில் கைது செய்யப்பட்டான்.
ஏப்ரல் 24 ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் நடந்த அந்த சம்பவத்தை தொடர்ந்து கைதான சந்தேகப் பேர்வழியின் கை தொலைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டதாக காஜாங் போலீஸ் தலைவர் Nazron Abdul Yusof தெரிவித்தார்.
தனது 16 வயது மகளுடன் ஒரு பேரங்காடியின் பணம் செலுத்தும் முகப்பிடத்தில் பணம் செலுத்த வந்ததாகவும் , அதற்கு முன்பு ஒரு நபர் தனது இளவயது மகளின் உடல் பகுதியில் புகைப்படங்களை எடுக்க முயன்றதாகவும் புகார்தாரர் புகாரில் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அந்த சந்தேக நபரைக் கண்டித்ததன் மூலம் அந்த முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. அதன் பின் , தனது செயல்களை மறுத்த அந்நபர் உடனடியாக அந்த பேரங்காடியிலிருந்து வெளியேறியுள்ளார்.
மனைவியை இழந்த அந்த நபருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதோடு இதற்கு முன் குற்றச் செயல் பின்னணி எதனையும் கொண்டிருக்கவில்லை. எனினும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பில் அந்த சந்தேகப் பேர்வழிக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக Nazron கூறினார்