கோலாலம்பூர், டிச 19 – ஈப்போ, மேருவில் கடந்த வெள்ளியன்று ஐந்தாம் படிவ மாணவன் ஒருவன் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பான காணொளிகளை பொதுமக்கள் பரப்பவோ அல்லது பகிரவோ கூடாது என ‘MCMC’ எனப்படும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் கேட்டுக் கெண்டுள்ளது.
1998ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் 233ஆவது விதியின் இத்தகைய செயல்கள் தண்டிக்கப்படலாம் என்று தொடர்பு, பல்லூடக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், அத்தகைய உள்ளடக்கத்தை பதிவேற்றியவர்கள் அதனை நீக்கும்படி MCMC வலியுறுத்தியது.
அந்த உள்ளடக்கத்தைப் பகிர்வது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமல்லாமல், அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை மீறுவதாகும். ஒவ்வொரு தனிநபரும் இந்த விவகாரத்தை கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அத்தகைய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பரப்பக்கூடாது என அந்த ஆணையம் கேட்டுக்கொண்டது. ஈப்போவில் ஜாதி இடைநிலைப்பள்ளிக்கு அருகே ஜாலான் தாமான் ஜாதியில் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் ஓட்டிச் சென்ற காரினால் மோதப்பட்டதால் அந்த மாணவன் இறந்தான்.
44 வயதுடைய அந்த அதிகாரி மீது ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் தண்டனை சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் நேற்று கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.