ஜோகூர் பாரு, பிப்ரவரி 5 – சீன புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, வார இறுதியில், சுல்தான் இஸ்கண்டார் மற்றும் சுல்தான் அபு பக்கார் ஆகிய இரு முக்கிய ஜோகூர் – சிங்கப்பூர் நுழைவாயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமென, ஜோகூர் குடிநுழைவுத் துறை எதிர்ப்பார்க்கிறது.
கடந்தாண்டு, ஜனவரி 20 மற்றும் 21-ஆம் தேதிகளில், சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது, அந்த இரு பிரதான நுழைவாயில்கள் வாயிலாக, மொத்தம் மூன்று லட்சத்து 48 ஆயிரத்து 693 பயணிகள் நாட்டில் நுழைந்ததாக, மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் பஹாருடின் தாஹிர் தெரிவித்தார்.
அதே போல, கடந்த மாதம் 31-ஆம் தேதி வரையில், அந்த இரு நுழைவாயில்கள் வாயிலாக, ஜோகூருக்குள் நுழைந்த சிங்கப்பூர் நாட்டவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தை எட்டியதையும், பஹாருடின் சுட்டிக்காட்டினார்.
அதனால், இவ்வார இறுதியில், அவ்விரு நுழைவாயில்களிலும், நெரிசலை குறைக்கவும், பயணத்தை எளிதாக்கவும் மலேசிய குடிநுழைவுத் துறை சில நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது.
சோதனை முகப்புகளை அதிகரிப்பது, நெரிசலை குறைக்க QRT விரைவுப் பாதைகளை அமல்படுத்துவது, விரைவுப் பேருந்து சேவை நேரத்தை 50 விழுக்காடு வரை குறைப்பது உட்பட தானியங்கி மற்றும் சாதாரண முகப்புகளை திறப்பதும் அதில் அடங்கும்.
இவ்வேளையில், அந்த பிரதான நுழைவாயில்களில் சுங்கத் துறை அதிகாரிகளும் பணியமர்த்தப்படவுள்ளனர்.