டெல் அவிவ் , பிப் 12 – ஹமாஸ் தரப்பு வசம் இருந்த இரு பிணையாளிகள் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருக்கிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதியன்று ஹமாஸ் தரப்பு நடத்திய தாக்குதலின்போது அவர்களால் பிடித்துச்செல்லப்பட்ட பிணையாளிகளில் 60 வயதுடைய பெர்னாண்டோ சைமன் மற்றும் 70 வயதுடைய லூயிஸ் ஹார் ஆகியோர் மீட்கப்பட்டனர். அவர்கள் இருவரும் நல்ல உடல்நிலையில் இருப்பதோடு மருத்துவ பரிசோதனைக்காக ஷெபா டெல் ஹாஷோமர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தரப்பு நடத்திய தாக்குதலின்போது அவர்கள் 250 பிணையாளிகளை பிடித்துச் சென்றனர். அந்த பிணையாளிகளில் இன்னமும் 130 பேர் காஸாவில் இருப்பதாகவும் 29 பேர் மரணம் அடைந்ததாக நம்பப்படுவதாக இஸ்ரேல் ராணுவத்தை மேற்கோள் காட்டி AFP செய்தி நிறுவனத் தகவல்கள் தெரிவித்துள்ளன.