சிரம்பான், மார்ச் 3 – சிரம்பானில் Rohingya மக்களின் வருகையால் ‘பர்மா கிராமம்’ என்ற பட்டப் பெயரைப் பெற்றப் பகுதியை ஒருவழியாக போலீசார் முற்றுகையிட்டதால், உள்ளூர் மக்கள் பெருமூச்சு விட்டனர்.
சிக்காமாட் அருகேயுள்ள தாமான் ஜூஜுரில் மூன்று தலைமுறைகளாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக Rohingya மக்கள் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் எந்நேரமும் கூட்டம் கூட்டமாக நடமாடுவது அப்பகுதி வாழ் மக்களை எப்போதும் கலக்கத்திலேயே வைத்திருக்கிறது.
இந்நிலையில், அவர்களின் வருகையால் தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக உள்ளூர் மக்கள் போலீசில் புகார் செய்ய, அச்சோதனை நடத்தப்பட்டது.
இரவு 10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட அந்த அதிரடிச் சோதனையில், 340 அந்நிய நாட்டவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்; அவர்களில் 335 பேர் Rohingya மக்களாவர்.
அவர்களில் 6 பெண்கள், 3 சிறார்கள் உள்ளிட்ட 24 பேருக்கு முறையான ஆவணம் எதுவும் இல்லை என நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் Datuk Abd Khalid Othman சொன்னார்.
இவ்வேளையில், அனுமதிக்கப்பட்ட காலத்தை விட கூடுதலாக இந்நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக 3 இந்தோனீசியர்களும் 2 வங்காளதேசிகளும் கைதானதாக அவர் சொன்னார்.
கைதான அனைவரும் லெங்கேங் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்படுவர் என்றார் அவர்.
குற்றச்செயல்கள் ஏதும் நடைபெறுகின்றனவா என்பதைக் கண்டறியும் அதே வேளை, அண்மையில் பேராக் பீடோரில் குடிநுழைவு தடுப்பு முகாமில் இருந்து தப்பியோடிய எஞ்சியவர்களை அடையாளம் காணும் நோக்கிலும் அச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக டத்தோ காலிட் சொன்னார்.