சிங்கப்பூர், மார்ச் 20 – சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தாயகம் திரும்பியுள்ளார்.
அதோடு, அவர் தனது அனைத்துலக பயணக் கடப்பிதழை மீண்டும் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
விசாரணைக்கு வரத் தவறியதை அடுத்து கடந்த செவ்வாய்கிழமை, ஈஸ்வரனை உடனடியாக சிங்கப்பூர் திரும்புமாறு அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனால், அந்த வழக்கு விசாரணை ஏப்ரல் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இரு கையூட்டு உட்பட 20 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள ஈஸ்வரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கி மார்ச் நான்காம் தேதி வரையில், ஆஸ்திரேலியாவிலுள்ள, பல்கலைக்கழகம் ஒன்றில் தனது மகனின் சேர்க்கையை நிர்வகிக்க அவருக்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், ஆஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த ஈஸ்வரனின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட அனுமதி மேலும் 16 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
எனினும், விசாரணை அதிகாரிகளுக்கு அவர் தினமும் வீடியோ அழைப்பு செய்ய வேண்டுமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
தமக்கு எதிரான இரு கையூட்டு உட்பட 27 குற்றச்சாட்டுகளை மறுத்து, கடந்த ஜனவரி 18-ஆம் தேதி ஈஸ்வரன் விசாரணை கோரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.