கோலாலம்பூர், மார்ச் 3 – உயர் வளர்ச்சித் தொழில்களில் புதியத் தலைமுறை பூமிபுத்ரா தொழில்முனைவர்களை உருவாக்க, அரசாங்கம் 1 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கவிருக்கிறது.
அந்நிதி, அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட முதலீட்டு நிறுவனங்களால் (GLIC) நிர்வகிக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (PICC) நடைபெற்ற 2024 பூமிபுத்ரா பொருளாதார மாநாட்டின் நிறைவு விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் அதனை அறிவித்தார்.
“Drone சேவைகளில் உலகச் சந்தையில் ஊடுருவிய Aerodyne போன்ற வெற்றிகரமான பூமிபுத்ரா தொழில் முனைவர் நிறுவனங்களை நம்மால் அதிகளவில் உருவாக்க முடியும். அதே சமயம் படைப்புத் துறையில் சிறந்து விளங்கும் Les’ Copaque மற்றும் Animonsta நிறுவனத்தின் வெற்றிகளைப் பற்றியும் நாம் பெருமைப்பட வேண்டும்,” என்று அன்வார் கூறினார்.
இவ்வேளையில், அதே மாநாட்டில் கலந்துக் கொண்ட வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ங்ஙா கோர் மிங், பொருளாதாரத்தில் போட்டி உண்மையில் பூமிபுத்ராக்களுக்கும் பூமிபுத்ரா அல்லாதோருக்கும் இடையில் அல்ல ; மாறாக ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தான் என தெளிவுப்படுத்தினார்.
எனவே, எதற்கும் உதவாத காலாவதியான சிந்தனையில் சிக்கிக் கொள்வதை விடுத்து, மலேசியர்கள் தங்களுக்குள் போட்டி போடாமல், ஒத்துழைக்க வேண்டும் என்றார் அவர்.
பூமிபுத்ரா மற்றும் பூமிபுத்ரா அல்லாத மலேசியர்களுக்கு இடையிலான வியூகப் பங்காளித்துவம் மலேசியா தொடர்ந்து வெற்றியடைவதற்கு ஒரு முக்கிய அங்கமாகும் என DAP MP-யுமான கோர் மிங் கூறினார்.
இன வேறுபாடின்றி மலேசியர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.