புத்ராஜெயா, மார்ச் 9 – வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்த மலேசியப் பெண்களுக்கு வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான குடியுரிமை தொடர்பில், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசாங்கம் இணங்கியிருக்கிறது.
வெள்ளிக் கிழமை நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த உத்தேச பரிந்துரைக்கு முழு ஒப்புதல் கிடைத்ததாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
இதையடுத்து, ஊடகங்கள், துறை சார் நிபுணர்கள், பொது அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கான விளக்கமளிப்புக் கூட்டங்களில் அமைச்சு கவனம் செலுத்தும் என்றார் அவர்.
அந்த உத்தேச சட்டம் திருத்த நகலை தேசிய சட்டத் துறை அலுவலகம் வரைந்து வருவதாக கடந்தாண்டு டிசம்பரில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அமைச்சரவை அதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்து விட்டதால், அச்சட்ட நகலை இவ்வாண்டே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும் என சைஃபுடின் நம்பிக்கைத் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களைத் திருமணம் செய்த மலேசியப் பெண்களுக்கு வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, சட்டப்பூர்வமாக குடியுரிமைக் கிடைக்க ஏதுவாக கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.