பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேசிய ஓட்டப்பந்தய வீராங்கனை ஷெரின் தேர்வு பெற வேண்டும் – அமெரிக்க பயிற்சியாளர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜன 10 – பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு மலேசியாவின் முன்னணி ஓட்டப்பந்தய வீராங்களை ஷெரீன் சாம்சன் வல்லபோய் தேர்வு பெற வேண்டும் என்பதே தமது விருப்பமாகும் என அவரது அமெரிக்க பயிற்சியாளர் டெரிக் ஒயிட் கூறியுள்ளார். 400 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை வைத்திருக்கும ஷெரீன் தற்போது உலக நிலையில் 92ஆவது இடத்தையும் ஆசியாவில் நான்காவது நிலையிலும் இருந்துவருகிறார். பாரிஸ் ஒலிபிக் போட்டிக்கு ஷெரீன் தகுதி பெறுவதாக இருந்தால் மே மாத இறுதிக்குள் அவர் 400 மீட்டர் ஓட்டத்தை 51 வினாடிகளுக்குள் ஓடி முடிக்க வேண்டும் என டெரிக் ஒயிட் சுட்டிக்காட்டினார். பேராக்கை சேர்ந்த ஓட்டப்பந்த வீராங்கனையான ஷெரீன் 400 மீட்டர் ஓட்டத்தில் அவரது தேசிய சாதனை நேரம் 51.80 வினாடிகளாக உள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதகாக இருந்தால் அவர் 50.95 வினாடி நேரத்தை கொண்டிருக்க வேண்டும்.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து அமெரிக்காவின் புளோரிடாவில் டெரிக் ஒயிட் தலைமையில் ஷெரீன் பயிற்சி பெற்று வருகிறார். தீவிர பயிற்சியில் மட்டுமின்றி பல்வேறு ஓட்டப்பந்த போட்டிகளிலும் அவர் கலந்து கொண்டு வருகிறார். இந்த ஆண்டு அவர் இன்னும் ஓட்டப்பந்த போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவ்வாண்டு இரண்டு மூடரங்கு மற்றும் திறந்த வெளியைக் கொண்ட 10 ஓட்டப்பந்த போட்டிகளில் பங்கேற்பதற்கு ஷெரீன் திட்டமிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் ஷெரீன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.