
பெடோங், ஏப்ரல்-20, ‘AIMST நமது தேர்வு’ பிரச்சார இயக்கத்தின் இலவச கல்விச் சுற்றுலாவில் நேற்று சிலாங்கூரைச் சேர்ந்த மாணவர்கள் பங்கெடுத்தனர்.
சிலாங்கூர் ம.இ.கா தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ எம். ஷங்கர் ராஜ் ஐயங்கார் ஏற்பாட்டில், 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து சுமார் 1,200 மாணவர்கள் 28 பேருந்துகளில் AIMST Campus வளாகம் வந்தடைந்தனர்.
அவர்களுடன் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்துகொண்டது உற்சாகத்தை ஏற்படுத்தியது.
AIMST வழங்கும் மேற்படிப்பு வாய்ப்புகள் குறித்து, நான்காம் ஐந்தாம் படிவ மாணவர்கள், STPM மாணவர்கள், மற்றும் அவ்விரு முக்கியத் தேர்வுகளையும் எழுதி முடிவுக்காகக் காத்திருப்போருக்கு விளக்குவதே இந்த கல்விச் சுற்றுலாவின் நோக்கமாகும்.
டிப்ளோமா, டிகிரி பட்டப்படிப்புகளுக்கான தேவைகள் குறித்து விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினர்.
ஆரம்பத்தில் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து, கல்வி உபகாரச்சம்பளம் பெற்று இன்று AIMST-டில் MBBS பட்டப்படிப்பை மேற்கொள்ளும் நவீனா ஸ்ரீ யின் வெற்றிக் கதையை, மாணவர் சேர்ப்புப் பிரிவின் துணைத் தலைவர் திரன், மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
AIMST பல்கலைக்கழகத்தில் உள்ள வசதிகள் குறித்து அதன் துணை வேந்தர் பேராசிரியர் Dr கதிரேசன் வி.சதாசிவம் பொதுவாக விளக்கமளித்தார்.
கல்வித் தொடர்பான கேள்விகளுக்கு மாணவர்கள், ம.இ.காவின் கல்விக் கரமான MIED-யை தொடர்புகொள்ளலாம்; அல்லது அந்தந்த ம.இ.கா தொகுதித் தலைவர்களை நாடலாம்.
அதே சமயம் மேற்கல்விக்கான முதல் தேர்வாக AIMST பல்கலைக்கழகத்தைப் பரிசீலிக்குமாறும் டத்தோ ஷங்கர் ராஜ் மாணவர்களுக்கு ஆலோசனைக் கூறினார்.
இலவச கல்விச் சுற்றுலாவில் பங்கேற்ற மாணவர்கள் AIMST-ன் பிரமாண்ட campus வளாகத்தைக் கண்டு வியந்ததோடு, உலகத் தரத்திலான அதன் வசதிகள் குறித்தும் ஆச்சரியம் தெரிவித்தனர்.
இந்த 1 நாள் பயணம், தங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான ஆர்வத்தையும் நம்பிக்கையையும் விதைத்திருப்பதாக தெரிவித்தனர்