
கோலாலம்பூர், பிப் 14 – B40 பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் , தாங்கள் பெற்ற PTPTN உயர்கல்வி கடனுதவியை திரும்பச் செலுத்துவதை ரத்து செய்யும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.
அந்த திட்டத்தை செயல்படுத்தினால், 42 பில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மிகப் பெரிய செலவை ஏற்க வேண்டியிருக்குமென, உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் ( Datuk Seri Mohamed Khaled Nordin ) மக்களவையில் தெரிவித்தார்.
எனினும், சம்பந்தப்பட்ட மாணவர்களின் நலனில் அக்கறை காட்டி வரும் அரசாங்கம், அக்கடனை திரும்பச் செலுத்துவதில், சில சலுகைகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கல்விக் கடனை திரும்ப செலுத்துவதை ஒத்தி வைப்பது, மாணவரின் நிதி ஆற்றலுக்கு ஏற்ப கடன் செலுத்தும் முறையை மறுசீரமைப்பது, கடனை முழுமையாக செலுத்தினால் கழிவு வழங்குவது போன்ற சலுகைகள் நடப்பில் இருப்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.