கோலாலம்பூர், மார்ச் 23 – கோலாலம்பூர், செந்தூலில் பெண் influencer ஒருவரிடம் இருந்து இரும்புப் பெட்டியைக் கொள்ளையிட்டுச் சென்ற கும்பல், அதனை பத்து பஹாட், செம்புரோங் ஆற்றில் வீசும் வரை, அதில் 10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான தங்கக் கட்டிகள் இருப்பதை அறிந்திருக்கவில்லை.
அண்மையில் கைதான 4 சந்தேக நபர்களும் தங்கள் வாயால் அதனை ஒப்புக் கொண்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மஜிட் தெரிவித்தார்.
இரும்புப் பெட்டியோடு ஓடியவர்கள், அதனுள் இருந்த நகைகள் உள்ளிட்ட விலையுயர்ந்தப் பொருட்களை எடுத்துக் கொண்டு, ஆதாரத்தை அழிக்கும் நோக்கில் ‘காலி’ பெட்டியை ஆற்றில் வீசியிருக்கின்றனர்.
ஆனால், இரும்புப் பெட்டியின் பூட்டை உடைக்கும் அளவுக்கு திறமை இருந்த அக்கும்பலுக்கு, அதனுள் மறைந்த வாக்கில் இருந்த சிறிய அறை தெரியாமல் போய் விட்டது.
அவர்கள் கைதாகி, அப்பெட்டியை போலீஸ் மீட்டு நன்றாக உள்ளே திறந்துப் பார்த்த போது தான், மறைவான அப்பகுதியில் 10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 4 தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதைக் கேட்டு கொள்ளையர்கள் வாயடைத்துப் போனதாக டத்தோ அலாவுடின் சொன்னார்.
அந்தத் தங்கக் கட்டிளோடு சேர்த்து, கொள்ளையர்கள் வசமிருந்த நகைகளும், ஆடம்பர அணிகலன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மதிப்பு மட்டுமே 21 லட்சம் ரிங்கிட் வரையில் இருக்கும் என நம்பப்படுகிறது.