சிங்கப்பூரில், பாலியல் மற்றும் வன்முறைக் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது
சிங்கப்பூர், பிப்ரவரி 6 – ஆபத்தான பாலியல் அல்லது கிரிமினல் குற்றவாளிகளுக்கு, ஆயுள் தண்டனை விதிக்க வகைச் செய்யும் சட்டத்திற்கு, சிங்கப்பூர் நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொது பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக, சிறைத் தண்டனை முடிவடைந்த பின்னரும், மீண்டும் அதே போல குற்றத்தில் ஈடுபடக்கூடிய அறிகுறிகளைக் காட்டும் கைதிகளை தடுப்பதை அது நோக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொடூரமான பாலியல் பலாத்காரம் அல்லது சிறார்களுடன் உடலுறவு அல்லது கற்பழிப்பு குற்றங்களுக்கு அச்சட்டம் பொருந்தும் என, சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்தார்.
சாதாரண சிறைத் தண்டனையை விதிப்பதே பொருத்தமானது என நீதிமன்றம் கருதினால், அப்புதிய சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்க தேவையில்லை என்பதை முடிவுச் செய்யும் அதிகாரம் அந்நாட்டு நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐநாவின் புள்ளி விவரப்படி, சிங்கப்பூரில் ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும், 0.2 மட்டுமே கொலை விகிதம் உள்ளது. அது உலகிலேயே மிகவும் குறைவான ஒரு விகிதமாகும்.