இஸ்கண்டார் புத்ரி, டிசம்பர் 22 – ஜோகூர், தஞ்சோங் கூப்பாங் சாலை கட்டண சாவடிக்கு அருகில், பிரேக் பழுதான லோரி ஒன்று மோதித் தள்ளியதில், இரு மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை மணி 5.50 வாக்கில், அவ்விரு மோட்டார் சைக்கிளோட்டிகளும், சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் வழியில் அவ்விபத்து நிகழ்ந்ததாக, இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் ரஹ்மாட் அரிபின் தெரிவித்தார்.
45 வயது உள்நாட்டு ஆடவர் ஓட்டிய அந்த லோரியில், பிரேக் பழுதடைந்ததை அடுத்து, அது டிரெய்லர், பேருந்து உட்பட இரு மோட்டார் சைக்கிளோட்டிகளை உரசி விபத்துக்குள்ளானது.
அச்சம்பவத்தில், லோரியில் மாட்டி இழுத்துச் செல்லப்பட்ட 49 மற்றும் 54 வயது மோட்டார் சைக்கிளோட்டிகள், தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
லோரி ஓட்டுனருக்கு நெஞ்சுப் பகுதியில் காயம் ஏற்பட்ட வேளை ; டிரெய்லர், பேருந்து ஓட்டுனர்களுக்கும், 29 பேருந்து பயணிகளுக்கும் காயம் எதுவும் ஏறபடவில்லை.
காயமடைந்தவர்கள், ஜோகூர் பாரு, சுல்தானா அமினா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.