அம்பாங், அக்டோபர்-15 – தான் பயணம் செய்த e-hailing காரிலேயே வாந்தி எடுத்ததை, காரோட்டுநர் தட்டிக் கேட்டதால் சினமடைந்து பக்கவாட்டு கண்ணாடியை எட்டி உதைத்த வியட்நாம் ஆடவருக்கு, 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
40 வயது அந்நபர் குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து அம்பாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அத்தண்டனையை வழங்கியது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், 2 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அக்டோபர் 6-ம் தேதி விடியற்காலை அம்பாங்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் 50 வயது எஸ்.கோபிகண்ணனுக்குச் சொந்தமான காரைச் சேதப்படுத்தியதாக, அந்த வியட்நாமிய ஆடவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
அன்று நள்ளிரவில் கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலிலிருந்து ஒரு பெண்ணுடன் அந்த e-hailing காரில் ஏறிய அந்நபர், பயணத்தின் போது காரினுள் வாந்தி எடுத்ததால், அவரை ஓட்டுநர் கண்டித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த இரு பயணிகளும், தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் கோபிகண்ணனை கீழே தள்ளி விட்டு வாயில் குத்தினர்.
அதில் அவருக்கு வாயில் காயமும் வலது கை முட்டியிலும் உள்ளங்கையிலும் வீக்கமும் ஏற்பட்டது.
அந்த Honda City காரின் இடது பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்தியதோடு வலப்பக்க கதவையும் அவர்கள் எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது.