சிரம்பான், ஜன 9 – இல்லாத இணைய கடன் மோசடி திட்டத்தை நம்பி பெண் ஒருவர் கிட்டத்தட்ட 200,000 ரிங்கிட்டை இழந்துள்ளார் என சிரம்பான் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அரிபாய் தாராவே உறுதிப்படுத்தினார். முகநூலில் வெளியான கடன் திட்ட விளம்பரத்தை நம்பி தாம் ஏமாந்தது குறித்து தனியார் துறையைச் சேர்ந்த அந்த பெண் ஜனவரி 5ஆம் தேதி போலீசில் புகார் செய்துள்ளார். 250,000 ரிங்கிட் கடன் பெறுவதற்கான ஏற்பாட்டை செய்வதாக தனிப்பட்ட நபர் ஒருவர் வழங்கிய வாக்குறுதியை தொடர்ந்து அவர் கொடுத்த வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளும்படி அந்த பெண் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
அதோடு கடன் கிடைப்பதற்கு வைப்புத் தொகை மற்றும் அதற்கான பரிசீலனை கட்டணத்தை வழங்கும்படியும் வழங்கப்பட்ட ஆலோசனையை நம்பி பல்வேறு வங்கிக் கணக்குகளில் 194,560 ரிங்கிட்டை அப்பெண் பட்டுவாடா செய்துள்ளார். எனினும் வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு ஏற்ப தமக்கு கடன் கிடைக்காததை தொடர்ந்து தாம் மோசடிக்கு உள்ளாகியிருப்பதை உணர்ந்து அப்பெண் போலீசில் புகார் செய்துள்ளதாக அரிபாய் தாராவே தெரிவித்தார்.