
கோலாம்பூர், பிப் 5 – HRD Corp எனப்படும் மனித வளங்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாகம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி (MACC) இன்னமும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
நிர்வாகம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் உட்பட சாத்தியமான ஊழலைப் பற்றி விசாரணையில் கவனம் செலுத்தப்படுவதாக சட்ட மற்றும் அமைப்புகள் சீரமைப்புக்கான பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸலினா ஒத்மான் (Azalina Othman) தெரிவித்தார்.
எம்.ஏ.சி.சியின் 2009 ஆண்டின் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மோசடி உள்ளிட்ட இதர குற்றங்கள் தொடர்பில் HRD Corpகிற்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அவர் கூறினார்.
விசாரணைகள் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதோடு நீதிமன்றத்தில் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்படும்வரை எந்தத் தரப்பினரும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிடக்கூடாது என்பதை எம்.ஏ.சி.சியின் 2009ஆண்டு சட்டத்தின் உட்பிரிவு 29 ( 4 ) துணை விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளதையும் அஸலினா சுட்டிக்காட்டினார்.
தலைமை கணக்காய்வாளர் அறிக்கையில் அமலாக்க நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு ஏற்ப HRD Corp நிர்வாகத்தின் மீதான MACC யின் விசாரணையின் ஆகக் கடைசி விவரங்கள் குறித்து பக்காத்தான் ஹரப்பான் பாயான் பாரு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் Sim Tze Tzin எழுப்பியிருந்த கேள்விக்கு வழங்கிய எழுத்துப் பூர்வமான பதிலில் அஸலினா இத்தகவலை வெளியிட்டார்.