
கோலாலம்பூர், ஏப் 27 – எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு தாம் உள்ளாகியுள்ளபோதிலும் பதவி விலகப் போவதில்லை என மனித வள அமைச்சர் V. சிவக்குமார் தெரிவித்துள்ளார். அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு தருவிப்பது மீதான ஊழல் விவகாரத்தில் எம்.ஏ.சி.சியின் விசாரணைக்காக சிவக்குமார் அழைக்கப்பட்டதோடு அவரது இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் சிவக்குமார் விடுமுறையில் செல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். தாம் பதவி விலக வேண்டிய அவசியமில்லையென பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பதால் அந்த முடிவை பின்பற்றி வருவதாக சிவக்குமார் தெரிவித்தார்.
தமது பதவி விலகல் குறித்த கேள்விக்கு ஏற்கனவே பிரதமர் பதில் அளித்து விட்டார் என அவர் கூறினார். MACC யில் விளக்கம் அளிப்பதற்கு மட்டுமே சிவக்குமார் அழைக்கப்பட்டாரே தவிர அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் கொண்டுவரப்படவில்லை என்பதால் அவர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லையென ஏப்ரல் 17ஆம் தேதி அன்வார் தெரிவித்திருந்தார். சிவக்குமாரின் இரண்டு உதவியாளர்களை கைது செய்த ஊழல் தடுப்பு நிறுவனம் நான்கு நாள் தடுத்து வைக்கும் காலம் முடிந்த பின் ஏப்ரல் 17ஆம்தேதி அவர்களை விடுதலை செய்தது.