
குளுவாங் , மார்ச் 28 – ikan buntal அல்லது Pufferfish எனப்படும் ஊது மீனை உட்கொண்ட 83 வயது மூதாட்டி ஒருவர் மரணம் அடைந்தார். அந்த மீனை உட்கொண்ட அந்த மூதாட்டியின் கணவரான 84 வயது ஆடவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குளுவாங், Chamek , Jalan Sin Tiam – மைச் சேர்ந்த அந்த ஆடவர் சமூக வலைத்தளத்தின் மூலமாக அந்த மீனை ஆர்டர் செய்திருந்ததால் சனிக்கிழமையன்று காலையில் அதனை பெற்றுள்ளார். அவர்கள் அந்த மீனை சுத்தம் செய்து சமைத்தபின் மதிய உணவின்போது உட்கொண்டனர். அதன் பின் மாலை மூன்று 3 மணியளவில் அந்த மூதாட்டிக்கு உடலில் நடுக்கம் ஏற்பட்டதோடு சுவாசிப்பதிலும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளார்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவரது கணவரும் இதே போன்ற சூழ்நிலையை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து அவர்களை அவரது மகன் Hajjah Kalsom மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டுச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற அந்த மூதாட்டி இரவு ஏழு மணியளவில் இறந்தார். அவரது கணவர் இன்னமும் மருத்துவமனையின் தீவிர சிகிக்சைப் பிரிவில் இருந்துவருகிறார். அந்த தம்பதியர் முதல் முறையாக இந்த மீனை உட்கொண்டுள்ளனர்.