ஜோகூர் பாரு, மார்ச் 12 – சட்டவிரோத குடியேறிகள் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து அதிரடி சோதனை நடத்தப்படும் என ஜோகூர் குடிநுழைவுத்துறையின் இயக்குனர் பஹாருதீன் தாஹிர் எச்சரித்திருக்கிறார். கம்போங் கங்கர் தெப்ராவிலுள்ள ரோஹிங்ய மக்களின் குடியிருப்பு பகுதியிலும் சட்டவிரோத குடியேறிகளின் நடமாட்டம் அணுக்கமாக கண்காணிக்கப்படும் என அவர் கூறினார்.
அந்த குடியிருப்பு பகுதியில் ஏற்கனவே ஜனவரி மாதம் 16ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஆவணங்கள் எதுவுமின்றி தங்கியிருந்த 73 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ரோஹிங்ய மக்களுடன் , நேப்பாள் மற்றும் வங்காளதேச பிரஜைகளும் அடங்குவர். அந்த குடியிருப்பு பகுதியில் தங்கியிருக்கும் ரோஹிங்ய மக்களில் பெரும்பாலோர் ஐ.நாவின் அகதிகள் ஆணைக்குழுவுக்கான கார்டுகளை வைத்திருக்கின்றனர்.
அந்த கிராமத்தில் 1,000த்திற்கும் மேற்பட்ட ரோஹிங்யா மக்கள் இருந்து வருகின்றனர். ஜோகூர் மாநிலத்தில் சட்டவிரோத குடியேறிகளின் வசிப்பிடமாக திகழும் 19 இடங்களை குடிநுழைவுத் துறை அடையாளம் கண்டிருப்பதாக பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார். கட்டுமானம், தயாரிப்பு தொழில்துறை மற்றும் வர்த்தக மையங்களில் வேலை செய்வோர் அங்கு தங்கியிருப்பதையும் தாங்கள் அறிந்துள்ளதாக அவர் கூறினார்