கோலாலம்பூத்ர , மார்ச் 19 – சமூகத்தின் அவலநிலையை அரசாங்கம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரான
பி வேதமூர்த்தி தெரிவித்திருக்கிறார்.
மலேசிய இந்தியர்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளை சமூகத்திற்கான மற்றொரு Blue Print பெருந்திட்டத்தை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் இந்திய சமூக மேம்பாட்டுக்கான முன்னெடுப்புகளிலிருந்து தடம் மாற முயற்சிப்பதாக முன்னாள் ஒற்றுமை துறை அமைச்சருமான வேதமூர்த்தி குற்றம் சாட்டியதோடு இதனால் மேலும் பெரிய எதிர்ப்பு அலை உருவாகும் எனவும் எச்சரித்துள்ளார்.
நியாயமற்ற திட்டங்களை வகுத்து, சமூகத்தின் அவலநிலையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், இந்தியர்களின் இக்கட்டான நிலையை அவர்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்டால், ஹிண்ட்ராப் போராட்டம் மீண்டும் தொடரும் என்பதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும் அவரது ஒற்றுமை அரசாங்கத் தலைவர்களுக்கும் தாம் நினைவூட்ட விரும்புவதாக வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் துறையின் கீழ் மித்ரா மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்பதோடு அதற்கு பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.இல்லாவிட்டால் இந்த நோக்கத்திற்காக அன்வார் ஒரு அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று வேதமூர்த்தி வலியுறுத்தினார்.
மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ராவிற்காக மீண்டும் ஒரு பெரும் திட்டத்தை உருவாக்குவதற்காக ஆலோசனை நிறுவனமான PEMANDU வை அரசாங்கம் நியமித்திருப்பது குறித்து அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி எம்.பி.க்கள் தேசிய ஒற்றுமை அமைச்சர் Aaron Ago Dagang-ங்கின் பொறுப்பற்ற தன்மையை எதிர்க்க வேண்டும் என வேதமூர்த்தி கேட்டுக்கொண்டார்.