கோலாலம்பூர், மார்ச் 13 – தெக்கூன் நேஷனல் கீழ், 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட SPUMI எனப்படும் இந்திய தொழில்முனைவர் மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக, இதுவரை நாடு முழுவதும் உள்ள மொத்தம் 28 ஆயிரத்து 439 இந்திய தொழில்முனைவர்கள் பயனடைந்துள்ளனர்.
அதற்காக, 44 கோடியே 26 லட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, இவ்வாண்டு மட்டும், SPUMI – இந்திய தொழில்முனைவர் மேம்பாட்டு திட்டத்திற்காக, மூன்று கோடி ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ள வேளை ; அதன் மூலம் ஆயிரத்து 600 இந்திய தொழில்முனைவர்கள் பயனடைவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக, தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர்.இரமணன் தெரிவித்தார்.
கடந்தாண்டு, SPUMI-க்காக வெறும் மூன்று கோடி ரிங்கிட் மட்டுமே ஒதுக்கப்பட்டாலும், உள்நிதியான ஒரு கோடியே 16 லட்சம் ரிங்கிட்டை பயன்படுத்தி, அந்த ஆண்டின் மொத்த
SPUMI நிதியை நான்கு கோடியே 16 லட்சமாக அதிகரிக்க முடிந்ததையும் இரமணன் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு, கூடுதல் நிதி ஒதுக்கீட்டிற்காக அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கப்பட்ட போது, அந்த கூடுதல் ஒதுங்கீடு கிடைக்கவில்லை.
அதனால், கடந்தாண்டை போல உள்நிதியை பயன்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படுமென, மக்களவை கேள்வி பதில் நேரத்தின் போது, இரமணன் தெரிவித்தார்.