ஈப்போ, மார்ச் 16 – ஈப்போவில் பெர்ச்சாம் அடுக்கக குடியிருப்பு பகுதியில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 158 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசா மற்றும் பெர்மிட் இல்லாமல் நாட்டில் கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதிகாலை ஒரு மணி முதல் விடியற்காலை 5 மணிவரை பெர்ச்சாம் அடுககு மாடி குடியிருப்பில் 15 புளோக்குகளில் உள்ள 560 வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் வாடகைக்கு இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டதாக பேரா குடிநுழைவுத்துறையின் இயக்குனர் ‘Meor Hezbullah Meor Abdul Malik’ தெரிவித்தார்.
மொத்தம் 358 வெளிநாட்டினரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் 83 ஆண்கள், 54 பெண்கள் உட்பட 9 முதல் 60 வயதுடைய 158பேர் கைது செய்யப்பட்டதாக இன்று காலையில் வெளியிட்ட அறிக்கையில் Meor தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் இந்தோனேசியா, நேப்பாள், மியன்மார், வங்காளதேசம் ,சீனா,பாகிஸ்தான், இலங்கை மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என Meor கூறினார்.