மூவார், மார்ச்-6, ஜொகூர், தங்காக்கில் தத்துப் பிள்ளையை மூன்றாண்டுகளாகக் கற்பழித்து வந்த கயவனுக்கு, 69 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 20 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தப் பணியாளரான 33 வயது அவ்வாடவன், மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
பிள்ளையின் தாயும், உடன் பிறந்தவர்களும் வீட்டில் இல்லாத போது ஒவ்வொரு மாதமூம் ஒரு முறை என அவர் அக்காரியத்தைச் செய்து வந்துள்ளான்.
கடைசியில் பாட்டி கண்டு பிடிக்கவே, அவனின் குட்டு அம்பலமாகி, போலீசில் புகார் செய்யப்பட்டது.
4 கற்பழிப்புக் குற்றச்சாட்டுகள், 1 பாலியல் தொல்லை குற்றச்சாட்டு என மொத்தமாக 5 குற்றச்சாட்டுகளை அவன் எதிர்நோக்கியிருந்தான்.
பிள்ளைகளும், நிறைமாத கர்ப்பிணியுமான மனைவியும் இருப்பதால் தனக்கு குறைந்தப்பட்ச தண்டனையை வழங்குமாறு நீதிபதியிடம் அவன் முறையிட்டான்.
ஆனால் நீதிபதியோ, “இது போன்ற வழக்குகளில் உன்னை விட பாதிக்கப்பட்டவருக்குத் தான் கரிசனம் காட்ட வேண்டும். உன்னால் அந்தப் பிள்ளைச் சந்தித்த அவலங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது எனக்கு விளங்கவே இல்லை” என கடிந்துக் கொண்டார்.
நீதிபதி தண்டனையை வாசித்த போது, பிரசவ நாளுக்காகக் காத்திருக்கும் அவனின் மனைவி கண்ணீர் சிந்தினார்.
ஐந்து குற்றச்சாட்டுகளுக்கும் தனித்தனியாக என அவன் மொத்தமாக 69 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றாலும், அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சிறைவாசம் முடிந்ததும் அவன் ஈராண்டுகளுக்கு போலீஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.