கோலாலம்பூர், ஜன 23 – மாற்றுத் திறனாளி பெண் ஒருவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களில் ஒருவரின் குழந்தைகளை திட்டி, கிள்ளியதாகக் கூறி, பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணை குச்சியால் தாக்கி, இரும்பினால் சூடு வைத்ததன் தொடர்பில் அந்த மாற்றுத் திறனாளி இறந்ததாக செர்டாங் போலீஸ் தலைவர் AA அன்பழகன் தெரிவித்தார். அந்த பெண்ணின் கொலை தொடர்பில் நான்கு ஆடவர்கள் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மணி 12.12 அளவில் தமது 20 வயது சகோதரி இறந்துவிட்டதாக அவசர அழைப்பை பெண் ஒருவரிடமிருந்து பெற்றதாக அன்பழகன் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4 மணியளவில் 25 மற்றும் 79 வயதுக்குமிடையே அந்த சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகப் பேர்வழி ஒருவரின் மூன்று வயது சிறுவன் மற்றும் அவனது 2 வயது தங்கையை திட்டியதோடு கிள்ளியதால் அந்த மாற்று திறனாளி கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டு உரிமையாளர்களில் ஒருவரினால் அந்த மாற்றுத் திறனாளி பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் இதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அவருக்கு மாதந்தோறும் 200 ரிங்கிட் வழங்கி வந்துள்ளார். மாற்று திறனாளிக்கான அட்டையை வைத்திருந்த அப்பெண் படிக்கும் திறன் இல்லாமல் இருந்ததோடு வேலை எதுவும் செய்யவில்லை. கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் ஜனவரி 28ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டனர். இதர மூவர் போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.