பாலிக் புலாவ், பிப்ரவரி 15 – பினாங்கில், மோசடி கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஆடவன் ஒருவனும், பெண் ஒருவரும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
முறையே 23 வயதான அவ்விருவரும், பாடாங் செராய் மற்றும் சுங்கை பெட்டாணியில் கைதுச் செய்யப்பட்டதாக, பாராட் டாயா போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் கமருல் ரிசால் ஜெனால் தெரிவித்தார்.
கைதுச் செய்யப்பட்ட பெண், 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம், இல்லாத பகுதி நேர வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, 22 வயது மாணவி ஒருவரிடமிருந்து 31 ஆயிரத்து 483 ரிங்கிட் பணத்தை ஏமாற்றியதாக நம்பப்படுகிறது.
அதே சமயம், கைதான 23 வயது ஆடவன், இல்லாத இணைய முதலீட்டு திட்டம் வாயிலாக, 25 வயது தொழில்நுட்ப பணியாளர் ஒருவரை ஏமாற்றியுள்ளான்.
அதனால், அந்த தொழில்நுட்ப பணியாளர் 15 ஆயிரத்து 470 ரிங்கிட்டை இழந்தார்.
கைதுச் செய்யப்பட்ட இருவரும், ஏமாற்று வேலையில் ஈடுபட்ட குற்றத்திற்காக, குற்றவியல் சட்டத்தின் 420-வது பிரிவின் கீழ் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.