கோலாலம்பூர், டிச 15 – மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதில்தான் தமது முழு கவனமும் இருக்கிறதே தவிர மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான ஆடை நெறிமுறைகளில் அல்ல என சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அஹ்மத் தெரிவித்திருக்கிறார்.
அனைத்து அரசாங்க சுகாதார நலன்களிலும் அவசர சிகிச்சை மையங்களிலும் வசதிகள் மேம்படுத்துவதில் தாம் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
நோயாளிகளின் காயங்களுக்கு மருந்து கட்டுவதில் கவனம் செலுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும் நோயாளிகளின் நோய் தன்மையின் கடுமை அடிப்படையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுல்கிப்ளி தமது டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.
அரசாங்க மருத்துவர்களின் உடைகள் நெறிமுறைகள் குறித்து கருத்துரைக்கும்படி சமூக வலைத்தள பயனர் ஒருவர் வினவியபோது அவர் இதனைத் தெரிவித்தார். அண்மையில் சுங்கைப் பட்டாணி மருத்துவமனையில் ஐந்து மணிநேரம் இருதய வலியில் துடித்துக்கொண்டிருந்த பின்னர் அனுமதிக்கப்பட்ட ரொட்டி சானாய் விற்பனையாளரான 51 வயதுடைய சந்திரன் சுப்ரமணியம் மரணம் அடைந்தது பேன்ற சம்பவம் இனியும் ஏற்படக்கூடக்கூடாது என்பதுதான் மிகவும் முக்கியம் என சுல்கிப்ளி சுட்டிக்காட்டினார்.