குவாலா லங்காட், மார்ச் 12 – சிலாங்கூர், பண்டார் ரிம்பாயுவில், பகுதி நேர புகைப்படக் கலைஞர் ஒருவர், தனது காதலியால் குத்தி கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
ஆடவர் ஒருவர் சுயநினைவு இழந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து, இன்று காலை மணி 9.41 வாக்கில், சைபர்ஜெயா மருத்துவமனையில் பணிப்புரியும் மருத்துவர் ஒருவரிடமிருந்து தகவல் கிடைத்ததை குவாலா லங்காட் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் அஹ்மாட் ரிட்சுவான் முஹமட் நோர் சாலோ உறுதிப்ப்படுத்தினார்.
30 நிமிடங்கள் வரை அவசர சுவாச உதவி வழங்கப்பட்ட போது, அவ்வாடவரை காப்பாற்ற முடியவில்லை என சம்பந்தப்பட்ட மருத்துவர் கூறியுள்ளார்.
காலை மணி 7.25 வாக்கில் அவ்வாடவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திலிருந்து, அவ்வாடவரின் 26 வயது காதலி கைதுச் செய்யப்பட்டார்.
அப்பெண் முன்னாள் மருத்துவ மாணவி என்பதும், பகுதி நேர மாடல் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலையுண்ட நபர் தன்னை ஏமாற்றிவிட்டதை உணர்ந்த அப்பெண், பொறாமையில் அவரை குத்தியதாக கூறப்படுகிறது.
அதனால், விசாரணைக்காக இன்று முதல் ஆறு நாட்களுக்கு அப்பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.