ஷா ஆலாம், பிப்ரவரி 28 – சிலாங்கூரில், கடந்தாண்டு 18 வயதுக்கு கீழ்பட்ட சிறுவர்கள் அதிகமானோர், கைகலப்பு அல்லது கலவரத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பில் மிக அதிகமாக 138 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை ; திருட்டு தொடர்பில் 112 பேரும், காயம் விளைவித்தது தொடர்பில் 87 பேரும், கற்பழிப்பு தொடர்பில் 86 கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதை, அரச மலேசிய போலீஸ் படையின், குற்றப் புலனாய்வுத் துறை புள்ளி விவரம் காட்டுவதாக, சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் அன்பால் ஷாரி தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் வசிக்கும் மொத்த மக்கட் தொகையில், மூன்றில் இரு பகுதி அல்லது 19 லட்சம் பேர், 18 வயதுக்கு கீழ்பட்ட சிறார்கள் ஆவர்.
அதில், கடந்தாண்டு நெடுகிலும், மொத்தம் 588 பேர் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, 13 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட 577 பேர் கைதுச் செய்யப்பட்ட வேளை ; எஞ்சிய 11 பேர், ஏழு வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.
சிலாங்கூர் சட்டமன்ற கூட்டத்தின் போது, சிறார் பாதுகாப்பு குறிப்பாக சிலாங்கூரில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார் எண்ணிக்கை குறித்து விளக்கமளிக்குமாறு கேட்கப்பட்ட கேள்விக்கு அன்பால் இவ்வாறு பதிலளித்தார்.