கோலாலம்பூர், பிப் 19 – பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லிக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் இரண்டு வாரங்கள் சிகிச்சைக்காக மலேசியா பல்கலைக்கழக புத்ரா (UPM) மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் தனது உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் இன்று பதிவிட்டிருந்தார்.
ஜனவரி மூன்றாவது வாரத்தில் முதல் முறையாக கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு சில நாட்கள் படுக்கையில் இருந்ததைத் தொடர்ந்து Slipped disc பிரச்னையை தாம் எதிர்நோக்கியதாக பி.கே.ஆர் கட்சியின் துணைத்தலைவருமான ரபிசி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சில வாரங்களுக்குப் பிறகு நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் வரை வலி மோசமாக இருந்தது எனவும் அவர் விவரித்தார்.
2023 அக்டோபரில் தனக்கு ஏற்பட்ட மாரடைப்பு குறித்தும் விளக்கிய ரபிசி இந்நிலை வேலை அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்பதையும் நிராகரித்தார். உடலில் கூடுதல் கொளூப்பின் அடைப்பின் காரணத்தால்தான் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரபிசியை சந்தித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தமது X தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இறைவனின் கருணையால் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என அன்வார் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், ரபிசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தொடர்பில், ‘ரபிசிக்கு என்னவாயிற்று, அவர் விரைவில் குணமடைய வேண்டும். மக்கள் பலர் அவர்களின் வாழ்வில் நீங்கள் வெளிச்சம் கொண்டுவர காத்துக் கொண்டிருக்கிறார்கள்’ என முன்னாள் பிரதமர் நஜிப்பின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் 1MDB வழக்குத் தொடர்பில் நஜிப்பை கடுமையாக சாடியவர் ரபிசி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் இருவருக்குமிடையே கடும் மோதல் போக்கு நீடித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.