கோலாலம்பூர், ஜனவரி 22 – நாடு முழுவதுமுள்ள மாணவர்களுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தருவதன் மூலம், பாலர் பள்ளி முறையை மறுபரிசீலனை செய்ய கல்வி அமைச்சு வலியுறுத்தப்பட்டுள்ளது.
PISA எனப்படும் 2022-ஆம் ஆண்டுக்கான சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத் திட்டத்தில், மலேசிய மாணவர்களின் செயல்திறன் குறைந்து பதிவாகியுள்ளதை அடுத்து, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்த வலியுறுத்தலை முன் வைத்துள்ளார்.
“PISA அறிக்கையின் விரும்பத்தகாத செய்தியுடன் தொடங்குகிறேன். ஆனால், அது இலக்கவியல் உள்கட்டமைப்பு, பள்ளி பாடத்திட்டம் மற்றும் பாலர் பள்ளி உட்பட பல்வேறு விவகாரங்களுடன் தொடர்புடையது” என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அந்த அனைத்து விவகாரங்களிலும் நாம் சற்று பின்தங்கியுள்ளோம். அதனால் தான், பாலர் பள்ளி முறையை மறுஆய்வுச் செய்யுமாறு, பட்லினாவை தாம் பணித்துள்ளதாக அன்வார் சொன்னார்.
தேசிய கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகள் குறுகிய காலத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.
அதனால், இவ்வாண்டு நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும், சரிசமமான பாலர் பள்ளி கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிச் செய்ய, தேவையான கூடுதல் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென தாம் பணித்துள்ளதாக, பிரதமர் சொன்னார்.