பெட்டாலிங் ஜெயா, ஜன 4 – மலேசியாவில் அந்நிய தொழிலாளர்கள் குறித்த விவகாரங்களை உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் மற்றும் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோர் பேச்சு நடத்தியுள்ளனர். வெளிநாட்டு தொழிலாளர்களை நிர்வகிக்கும் விவகாரத்தில் விவேகமான நடவடிக்கைக்கான வழிமுறை குறித்து விவாதிப்பதற்காக அவ்விரு அமைச்சர்களும் நேற்று சந்திப்பு நடத்தினர்.
உறுதியளித்தபடி தங்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கத்தவறிய தங்களது Agent-டுகளுக்கு எதிராக போலீசில் புகார் செய்வதற்காக ஊர்வலமாக சென்ற 171 வங்காளதேசிகள் டிசம்பர் 20ஆம் தேதியன்று ஜோகூரில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வெளிநாட்டு தொழிலாளர்கள் விவகாரம் குறித்து சைபுதீனும் ஸ்டீவன் சிம்மும் நேற்று பேச்சு நடத்தினர்.
வெளிநாட்டுச் சுரண்டல் ஒரு சூடான மற்றும் தீவிரமான பிரச்சனை என்பதை ஒப்புக்கொண்டு, வெளிநாட்டு தொழிலாளர் நிர்வாகம் தொடர்பான நோக்கத்தில் தங்களின் சந்திப்பு கவனம் செலுத்தியதாக சைபுதீன் கூறினார்.
மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிர்வாகத்தில் செய்யக்கூடிய மேம்பாடுகளை உள்ளடக்கிய 2024ஆம் ஆண்டிற்கான முன்னோக்கிய வழியையும் நாங்கள் விவாதித்தோம் . இதர பல்வேறு விவகாரங்களும் விவாதிக்கபட்டன. இது தொடர்பாக இந்த வாரம் நாங்கள் கூட்டறிகையை வெளியிடுவோம் என சைபுதீன் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.