கிள்ளான், பிப்ரவரி 14 – சிலாங்கூர், காப்பார், கம்போங் தோக் மூடா பகுதியில், நேற்று மதியம் விழுந்து நொறுங்கிய, பிகே 160 கேப்ரியல் சிறு ரக விமானத்தின் விமானி மற்றும் துணை விமானியின் மரணத்திற்கு, அவர்கள் உடலில் ஏற்பட்ட பல்வேறு விதமான காயங்களே காரணம்.
இன்று காலை மணி பத்து தொடங்கி நண்பகல் மணி 12 வரையில் மேற்கொள்ளபட்ட சவப்பரிசோதனையில் அது தெரிய வந்ததாக, வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ். விஜய ராவ் தெரிவித்தார்.
கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் அந்த சவப்பரிசோதனை நடைபெற்றது.
அதோடு, கைரேகை ஆய்வு மூலம், அவ்விபத்தில் உயிரிழந்தவர்கள், 31 வயது டேனியல் யீ சியாங் கூன் மற்றும் 43 வயது ரோஷன் சிங் ரெய்னா எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, விஜய ராவ் சொன்னார்.
முன்னதாக, நேற்று மதியம் பிகே 160 கேப்ரியல் ரக சிறு விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய சம்பவத்தில், அவ்விமானத்தின் விமானியும், உதவி விமானியும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.