கோலாலம்பூர், பிப் 15 – நாட்டின் வறட்சிக் காலம் மற்றும் வெப்பமான வானிலை மே மாதம் வரை தொடரும் என ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதனால் தீ விபத்து சம்பவங்கள் ஏற்படும் சாத்தியங்களும் உள்ளதால், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அதனை எதிர்நோக்கவும் அனைவரும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த சூழலை சாதகமாக பயன்படுத்தி “Fire Hydrants” எனப்படும் தீ அணைப்பு கருவிகளை சிலர் போலியாக இணையத்தில் விற்பனை செய்து வரும் திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ‘தீயை அணைக்கவும், உயிர் மற்றும் உடமைகளை காப்பாற்றும் மிக முக்கிய கருவியான தீ அணைப்பு கருவியை தரமற்று அல்லது முற்றிலும் போலியாக தயாரித்து சந்தைப்படுத்தினால், அவசர வேளையில் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது?’ என்று பலர் தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த போலி தீயணைப்பு கருவி தொடர்பான பல புகார்களும் போலிஸுக்கு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, இணையத்தில் இனி தீயணைப்பு கருவிகளை வாங்குபவர்கள் சிரிம் நிறுவத்தின் தர முத்திரியை சரிபார்த்து உற்பத்தியாளரின் தகவலையும் உறுதிப்படுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.